அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயிலுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலைய துறைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோயிலுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பாக, கந்தகோட்டம் ஆயிர வைஷ்ய பேரி செட்டியார் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இது குறித்து நடைபெற்ற விசாரணையில், நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவை அவமதிக்கும் வகையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இருவர் நீக்கப்பட்டுள்ளதால் அந்த உத்தரவு சட்டவிரோதமானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து, கல்வி நிறுவனங்களை கண்காணிக்கத் தனிப்பிரிவு உள்ளதாகவும், அது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனவும் அறநிலையத் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, ஏற்கனவே அவகாசம் அளித்தும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, அறநிலையத் துறைக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து, அறங்காவலர் குழுவில் இருந்து சட்டவிரோதமாக நீக்கப்பட்ட 3 உறுப்பினர்களையும் உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி,
கல்வி நிறுவனங்களை கண்காணிக்கும் தனிப்பிரிவு குறித்த விரிவான அறிக்கையை அறநிலைய துறை தாக்கல் செய்ய கூறி வழக்கை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
















