மதுரை மேயர் தேர்வில் நீடிக்கும் இழுபறியால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக வரும் 10ம் தேதி மாமன்றக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு நடந்ததாக ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, மாநகராட்சி மேயர், மண்டல தலைவர்கள் மற்றும் குழுத் தலைவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்னாள் மாநகராட்சி மேயரின் கணவர், மண்டல தலைவரின் கணவர், உதவி ஆணையர் உள்ளிட்ட 27 பேரை கைது செய்துள்ளனர். 25-க்கும் மேற்பட்ட மாநகராட்சி நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நீக்கமும், பணியிடை நீக்கமும் செய்து துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, புதிய மேயரை நியமிப்பது தொடர்ப்பாக திமுக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இடையே உட்கட்சி பிரச்னை நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக புதிய மேயர் நியமனத்தில் இழுபறி நீடிப்பதுடன், 3 மாதங்களுக்கு மேலாக மாமன்ற கூட்டம் நடைபெறாமல் 100 வார்டுகளில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்ட நிலையில், அதன் எதிரொலியாக வரும் 10-ம் தேதி மாமன்றக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணை மேயராக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகராஜன் பொறுப்பு மேயராக தலைமையேற்று கூட்டத்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















