இடதுசாரிகளின் அர்ப்பணிப்பு அரசியல் வன்முறையை அடிப்படையாகக் கொண்டது என கேரளாவை சேர்ந்த பாஜக எம்பி சதானந்தன் மாஸ்டர் விமர்சித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த பாஜக எம்.பி சதானந்தன் மாஸ்டர் மாநிலங்களவையில் தனது முதல் உரையை ஆற்றினார். அப்போது அவர் தனது செயற்கை கால்கள் இடதுசாரி கட்சியினரின் உண்மை முகத்தை காட்டுவதாக கூறி, அவற்றை மேஜையில் கழற்றி வைத்தார்.
தொடர்ந்து பேசிய சதானந்தன் மாஸ்டர், ஜனநாயகம் பற்றி கர்ஜிக்கும் இடதுசாரிக் கட்சியினர் 31 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் தன் மீது தாக்குதல் நடத்தினர் என கூறினார். தான் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இடதுசாரிகள் தன் கால்களை வெட்டி இன்குலாப் ஜிந்தாபாத் என்று கூச்சலிட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு சிபிஎம் தலைவர் ஜான் பிரிட்டாஸ் எழுந்து நின்று ஆட்சேபனை தெரிவித்தார். இருப்பினும் தொடர்ந்து பேசிய சதானந்தன் மாஸ்டர், எப்போதும் ஜனநாயகம், சகிப்புத்தன்மை மற்றும் மனிதநேயம் பற்றி பேசும் இடதுசாரியினரின் அரசியல் வன்முறையை அடிப்படையாகக் கொண்டது என விமர்சித்தார்.
மேலும், இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல எனவும் சதானந்தன் மாஸ்டர் தெரிவித்தார். மேஜைகளில் செயற்கை கால்களை கழற்றி வைத்து சதானந்தன் மாஸ்டர் பேசியது அவருக்கு நேர்ந்த கொடுமைகளை தெளிவாக விளக்கியது.
















