ராகுலின் விமர்சனம் சீக்கியர்கள் மத்தியில் தீவிரமான பிரச்னையாக பார்க்கப்படுவதாகவும், நாட்டிற்காக ரத்தம் சிந்திய குடும்பத்தை சேர்ந்தவரை ‘துரோகி’ என்று அழைப்பதை ஏற்க முடியாது எனவும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரத்தில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.டெல்லியில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரவ்னீத் சிங் பிட்டு லூதியானா எம்பி மட்டுமல்ல, தேசத்திற்கு பெரும் தியாகங்களை செய்த சீக்கிய குடும்பத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டார்.
நாட்டிற்காக ரத்தம் சிந்திய ஒரு குடும்பத்தை சேர்ந்தவரை ‘துரோகி’ என அழைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி, தனது தாத்தாவான முன்னாள் முதலமைச்சர் பியான்ட் சிங்கை இழந்தவர் ரவ்னீத் சிங் என்றும், எந்தவொரு சமூகத்தை சேர்ந்தவரையும் இப்படி முத்திரை குத்துவது தவறானது எனவும் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் விமர்சனம் சீக்கிய சமூகத்தினர் மத்தியில் தீவிரமான பிரச்னையாக பார்க்கப்படுவதாகவும், நாடாளுமன்ற விவாதம், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயும், கண்ணியமான மொழியில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
















