தமிழ் மொழியை விமர்சித்து ஈ.வெ.ராமசாமி தெரிவித்த கருத்தை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாக கூறிய கமல்ஹாசனுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
எம்பியாக தேர்வான மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மாநிலங்களவையில் முதன்முறையாக உரையாற்றினார். அப்போது, தமிழ் மொழி பிச்சை எடுக்கக்கூட உதவாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாக அவர் தவறாக விமர்சித்தார்.
ஆனால், தமிழ் மொழி பிச்சை எடுக்கக்கூட உதவாது என்ற கருத்தை ஈவெ.ராமசாமி தான் தெரிவித்திருந்தார். ஈ.வெ.ராமசாமி இவ்வாறு எல்லாம் தமிழை இழிவுபடுத்தி பேசியுள்ளார் என்பதைதான், நிதியமைச்சர் கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டி பேசியிருந்தார்.
இந்நிலையில், உண்மை நிலவரம் என்னவென்று தெரியாமல் பேசிய கமல்ஹாசனுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈவெ.ராமசாமி கொள்ளுப்பேரன் என்று மார்தட்டிக்கொள்ளும் கமல்ஹாசனுக்கு, தான் பேசும் வசனங்களில் உண்மை இருக்கிறதா என ஆராயும் பழக்கம் எப்போதும் இல்லை என விமர்சித்துள்ளது.
மேலும், இப்படிப்பட்ட ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைத்த கூட்டணி கட்சியை என்னவென்று சொல்வது எனவும் பாஜக ஆதங்கம் தெரிவித்துள்ளது.
















