மேகாலயாவில் சட்டவிரோதமாக இயங்கிய நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்தில் அமைந்துள்ள தஷ்காய் என்ற பகுதியில் சட்டவிரோதமாக நிலக்கரிச் சுரங்கம் இயங்கி வந்துள்ளது.
இங்கு ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இதுவரை 18 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பணியில் இருந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
மேலும் மத்திய அரசு தரப்பில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவை தொடர்பு கொண்டு விசாரித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அரசின் அனைத்து ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார்.
















