அமெரிக்க வரி குறைப்பால் திருப்பூர் ஏற்றுமதி பெருமளவு அதிகரிக்கும் என்றும், திருப்பூருக்கு இதுவொரு மகிழ்ச்சியான தருணம் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பின்னலாடை ஏற்றுமதி நடைபெற்று வரும் நிலையில், அதில் 40 சதவீதம் அமெரிக்காவுக்கு மட்டுமே அனுப்பப்படுகிறது.
கடந்த 4 மாதங்களுக்கு முன் இந்தியா மீது அமெரிக்கா விதித்த கூடுதல் வரி காரணமாக அமெரிக்காவுக்கு பின்னலாடை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இந்தியா – அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதன் மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியில் 32 சதவீதம் குறைக்கப்பட்டு வெறும் 18 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் திருப்பூரில் பின்னலாடை தொழில் புத்துயிர் பெறும் என தொழில் துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க துணைத்தலைவர் இளங்கோ கூறுகையில், ‘ அமெரிக்க வரி காரணமாக சிலமாதங்களாக திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். பல நிறுவனங்கள் ஆர்டர்களை அனுப்ப முடியாமல் தவித்தனர். தற்போது பிப்ரவரி 6ந்தேதி, அமெரிக்கா வரியினை 18 சதவீதமாக குறைத்துள்ளது திருப்பூருக்கான பெரும் வாய்ப்பாக இருக்கிறது. பின்னலாடத்தொழிலுக்கு நல்ல சூழல் உருவாகி உள்ளது.
அமெரிக்க வரி குறைப்பு, ஐரோப்பிய வரியில்லா ஒப்பந்தம் போன்ற காரணங்களால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியானது இந்த ஆண்டு 15 முதல் 20 சதவீதம் உயரும். இந்த ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 40 பில்லியன் என்ற அளவிற்கு செல்லும். இதற்கான கட்டமைப்புகளையும், மனிதவளத்தயும் மேம்படுத்தி இலக்கினை அடைய வேண்டும் என்றார்.
ஆயத்தஆடை மேம்பாட்டுக் கழக செயற்குழு உறுப்பினர் ராமு கூறுகையில், ‘இந்திய-அமெரிக்க ஒப்பந்ததித்தின் மூலம் திருப்பூருக்கு இது ஒரு வின்வின் சிச்சுவேசன். இது ஒரு வரப்பிரசாதம். 4 மாதங்கள் பட்ட கஷ்டத்துக்கு வரிகுறைக்கப்பட்டுள்ளது.
40 சதவீதம் அளவுக்கான ஏற்றுமதி அமெரிக்காவுக்கு மட்டுமே நடந்த நிலையில், அதிகப்பட்சமான வரி காரணமாக நிறைய தேக்கம் ஏற்பட்டது. தற்போது வரிகுறைக்கப்ப்ட்டு தொடர்ச்சியாக வர்த்தக ஆர்டர்கள் வந்து கொண்டு இருக்கிறது. தெளிவான ஆர்டர்களை எடுத்து செய்து திருப்பூரின் ஒரு லட்சம் கோடி இலக்கு என்ற நிலையை அடைய வேண்டும். இதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.
















