திருச்சியில் குரூப் 2, 2a தேர்வு எழுதிக் கொண்டிருந்தவர்களிடம் வினாத்தாள்கள் பாதியிலேயே திரும்பப் பெறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குரூப்-2 முதன்மைத் தேர்வு நடைபெற்றது. தேர்வர்கள் தீவிரமாக விடையளித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென அறைக்குள் நுழைந்த அதிகாரிகள், தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தேர்வர்களிடமிருந்து வினாத்தாள்களைத் திரும்பப் பெற்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள் மனவேதனையுடன் தேர்வு அறையில் இருந்து வெளியேறினர்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் குரூப் 2, 2 ஏ தேர்வர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் வேதனை அடைந்தனர்.
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதற்கான முறையான அறிவிப்பு சென்றடையாததால், சேலம் மையத்தில் 2 மணி நேரத்துக்குப்பின் தேர்வறையிலிருந்து தேர்வர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த தேர்வுக்காக தாங்கள் பல ஆண்டுகள் தயாராகி வந்ததாகவும், தங்களின் காலத்தை அரசு வீணடித்து விட்டதாகவும் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மைத் தேர்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கோவையில் டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டு காலை தேர்வுகள் துவங்கின.சென்னையில் தேர்வு மையங்களில் குழப்பம் காரணமாக, தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டதால் கோவையில் தேர்வு மையத்தில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டனர். இதேபோன்று, திருப்பூரிலும் நீண்ட நேரத்திற்கு பிறகு டிஎன்பிஎஸ்சி ரத்து தொடர்பான சுற்றறிக்கை கிடைத்ததால், 2 மணி நேரத்திற்கு மேலாக தேர்வெழுதிய தேர்வர்கள் வெளியேற்றப்பட்டதால், தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
















