மதுரை மாவட்டம் மேலூர் அருகே காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளது.
மேலூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவலர் குடியிருப்பு அருகே நிறுத்தி வைத்திருந்தனர். , இந்த வாகனங்களில் திடீரென தீ பற்றி மளமளவென எரிந்தது.
அப்போது, வாகனங்களின் எரிபொருள் டேங்க்குகள் வெடிக்கத் தொடங்கியதால் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர்,சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் வேன், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமாகியது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















