திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே அரசு பள்ளியில் பாம்பு கடித்து சிகிச்சை பலனின்றி 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கேத்தனூர் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் சிவப்பிரகாசம், அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் புத்தகங்களை எடுக்கும் பொழுது, அங்கிருந்த கட்டு விரியன் பாம்பு மாணவன் சிவப்பிரகாசத்தை கடித்துள்ளது.
அப்போது அவருடைய தங்கை சிவசங்கரியும் அருகே இருந்துள்ளார். தகவல் அறிந்த ஆசிரியர்கள் மாணவன் சிவப்பிரகாசத்தை தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில், மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனிடையே, பள்ளி கட்டடத்திற்குள் பாம்பு வந்தது எப்படி என கேள்வி எழுப்பியுள்ள பெற்றோர், மாணவர்கள் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
இதையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் மாணவன் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.
















