இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் நாடு கடந்த குற்றங்கள் தொடர்பான ‘கூட்டு செயல் திட்டத்துக்கு இந்தியாவும் கனடாவும் ஒப்புக் கொண்டுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2023ம் ஆண்டு, கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளது என்று அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்
ட்ரூடோவின் குற்றச்சாட்டை அபத்தமானது, ஆதாரமற்றது என்று நிராகரித்த இந்தியா, கனடாவுடனான தூதரக உறவை நிறுத்தி வைத்தது. கனடாவில் இருந்த தனது உயர் ஆணையரையும் ஐந்து தூதர்களையும் திரும்ப அழைத்துக் கொண்ட இந்தியா,இந்தியாவில் இருந்த கனடா தூதர்களையும் வெளியேற்றியது.
இந்தச் சூழலில் நடைபெற்ற கனடா தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான மார்க் கார்னி இந்தியாவுடனான உறவைச் சீரமைக்க முயற்சி எடுத்தார்.
கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியைச் சந்தித்து மார்க் கார்னி பேச்சு வார்த்தை நடத்தினார்.அதனை தொடர்ந்து தங்கள் நாட்டு தலைநகரங்களில் தூதரக உயர் ஆணையர்களை இரு தலைவர்களும் நியமித்தனர்.
கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடியும் மார்க் கார்னியும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். உயர் லட்சிய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இந்தியாவும் கனடாவும் ஒப்புக் கொண்டன.
தொடர்ந்து கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியையும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை செய்தார்.
இதற்கிடையே, கனடா பிரதமரின் துணைச் செயலர் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசகரான திருமதி நதாலி ட்ரூயின், இந்தியாவுக்கு வந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார்.
இந்நிலையில்,கடந்த வாரம் கனடாவின் பிரான்ஸ் மற்றும் மொனாக்கோவுக்கான தூதராக நதாலி டிரூயின் நியமிக்கப்பட்டார். தனது தூதரகப் பணிக்காக பாரிஸ் புறப்படத் தயாராகி வரும் நிலையில், கனடாவில் அவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.
இந்தச் சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கப் பிரச்சினைகள் குறித்த இருதரப்பு ஒத்துழைப்புக்கு வழிகாட்டவும், பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கத் தொடர்பு அதிகாரிகளை நியமித்து நடைமுறை ஒத்துழைப்பை செயல்படுத்தவும் கூட்டுச் செயல் திட்டத்துக்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
மேலும் இருதரப்பு உளவுத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், சட்ட அமலாக்கத்தை நெறிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஃபெண்டானில் போன்ற போதைப்பொருட்களின் சட்டவிரோதப் புழக்கம் மற்றும் நாடு கடந்த போதை பயங்கரவாத நெட்வொர்க் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க இந்த செயல் திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க, இணையப் பாதுகாப்பு கொள்கை மற்றும் இணையப் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்த தகவல் பகிர்வு தொடர்பான ஒத்துழைப்பை முறைப்படுத்துவதற்கும், மோசடி மற்றும் குடியேற்ற அமலாக்கம் தொடர்பான ஒத்துழைப்பு குறித்த விவாதங்களைத் தொடர்வதற்கும் இருநாடுகளும் உறுதி யளித்துள்ளன.
கூடுதலாக கனடாவின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியையும் சந்தித்து பேசியுள்ள அஜித் தோவலின் இந்த கனடா பயணம் தேசப் பாதுகாப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது.
















