சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் வருவாய்த் துறையில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர், தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு ராஜாஜி சாலை நோக்கி பேரணியாக சென்றனர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூரில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட வருவாய் துறை ஊழியர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் திடீரென ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
















