சென்னை பாரிமுனை பூக்கடை பகுதியில் தேர்தல் சர்வே மேற்கொண்ட தவெகவினர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பாரிமுனை, பூக்கடை அங்கப்பன் நாயக்கன் தெரு மற்றும் இஸ்லாம் சாலை பகுதிகளில், தவெக நிர்வாகிகள் 15 பேர் வீடு வீடாகச் சென்று தேர்தல் சர்வே பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த திமுக வட்டச் செயலாளர் கவியரசு, காவல்துறை அனுமதி இல்லாமல் தங்களுக்கு சர்வே எடுக்க அனுமதி கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர், 30-க்கும் மேற்பட்ட திமுகவினரை அங்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கு வந்த திமுகவினர் தவெகவினர் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, சர்வே எடுப்பதற்கு காவல்துறையிடம் அனுமதி கடிதம் வழங்க முயன்றதாகவும், ஆனால் அவர்கள் வாங்க மறுத்துவிட்டு தற்போது திட்டமிட்டு போலீசார் முன்னிலையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தவெகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
















