மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்னர், மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டிந்ததாகவும், பிரதமரின் பாதுகாப்பு கருதியே அவரது பதிலுரை ரத்து செய்யப்பட்டதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
இதனிடையே, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்குப் போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்றும், சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி, அவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், எதிர்கட்சிகள் வழங்கிய நோட்டீஸில், நிகழ்வுகளைக் குறிப்பிடும் போது, தற்போதைய ஆண்டான 2026 என்பதற்குப் பதிலாக, தவறுதலாக 2025 என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
















