இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு 7 பட்டாக்கள் வழங்கப்பட்ட முறைகேடு தொடர்பாக விசாரைணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவில், முறைகேடாக 7 பட்டாக்களைப் பெற்றதாகவும், பட்டாக்கள் ரத்து செய்யப்பட்ட பின்பும் முறைகேடாக வீடுகளை கட்டி வருவதாகவும், இந்த ஆக்கிரமிப்பை அகற்றி அரசு நிலத்தை மீட்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து நடைபெற்ற விசாரணையில், மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற தடையை மீறி தற்போது வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும்,
அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும் வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் ஏற்கனவே பரமக்குடி வருவாய் அலுவலரால் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வசதி படைத்த ஒரு நபர் அரசு நிலங்களை முறைகேடாகப் பெற்று, பட்டா ரத்து செய்யப்பட்ட பின்பும் ஆக்கிரமிப்பு செய்வது ஏற்புடையதல்ல என அதிருப்தி தெரிவித்தனர்.
தொடர்ந்து, முறைகேடாகப் பெறப்பட்ட நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற ராமநாதபுரம் ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
















