தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும் ‘மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு’ ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர்.
அங்கு போதிய இருக்கை வசதிகள் இல்லாததால், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் என அனைவரும் நீண்ட நேரம் வெயிலிலும், வராண்டாக்களிலும் தரையில் அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் ஆதாரங்களுடன் செய்தி ஒளிபரப்பானது.
அதன் எதிரொலியாக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவின் பேரில், ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முக்கியப் பகுதிகளில் தற்போது 100-க்கும் மேற்பட்ட புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இனி மனு அளிக்க வரும் பொதுமக்கள் தரையில் அமர வேண்டிய நிலை ஏற்படாத வகையில் முறையான வரிசை அமைப்புகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
















