கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மகா சிவராத்திரி சிவாலய ஓட்டத்தில், 5 மாத கைக் குழந்தையுடன் பங்கேற்ற தம்பதி, 108 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களை ஓடித் தரிசிக்கும் ‘சிவாலய ஓட்டம்’ கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வரும் நிலையில், குட்டகுழி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் – அபிஷா தம்பதியின் பயணம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுக்குத் திருமணமாகி 6 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாததால், தங்களுக்குக் குழந்தை பிறந்தால் சிவாலய ஓட்டத்தில் குழந்தையோடு பங்கேற்று 12 சிவாலயங்களையும் தரிசிப்பதாக வேண்டிக் கொண்டனர்.
வேண்டுதலின் பலனாக இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து 5 மாதம் ஆகும் நிலையில், 12 சிவாலயங்களையும் உள்ளடக்கிய சுமார் 108 கிலோமீட்டர் தூரத்தை, குழந்தையைச் சுமந்து கொண்டே தம்பதியினர் நடந்து சென்று, வேண்டுதலை நிறைவேற்றியுள்ளனர்.
















