காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் பழஞ்சூர் மற்றும் பாப்பான்சத்திரம் கிராம மக்கள், தங்களை திருவள்ளூர் மாவட்டத்துடன் இணைக்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பழஞ்சூர் மற்றும் பாப்பான்சத்திரம் கிராமங்களில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 1997-ம் ஆண்டு மாவட்டப் பிரிவினையின் போது ஏற்பட்ட குளறுபடிகளால், ஒரே ஊராட்சி இரண்டு மாவட்டங்களின் கட்டுப்பாட்டில் சிக்கியதால், கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, 2022-ல் தமிழக அரசு இந்த இரண்டு கிராமங்களையும் முழுமையாக திருவள்ளூர் மாவட்டத்துடன் இணைத்து உத்தரவிட்டது.
ஆனால், அரசாணை வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்தும், தற்போதும் வருவாய்த் துறைப் பதிவேடுகளில் கிராமங்களின் பெயர்கள் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது.
பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய கிராமங்கள், பூந்தமல்லி வருவாய்த் துறை பதிவேட்டில் இல்லை எனவும், மாறாக, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மேவளூர்குப்பம் என்ற பெயரிலேயே இப்போதும் நீடிப்பதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இந்த நிர்வாகக் குளறுபடிகளைக் கண்டித்து, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குமணன்சாவடி பேருந்து நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அரசாணையை உடனடியாக அமல்படுத்தவில்லை என்றால் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
















