இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெறும் லீக் போட்டி, இறுதிப் போட்டி அளவிற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றியை மட்டுமே தக்க வைத்திருக்கும் இந்திய அணி குறித்தும், தோற்று தோற்று ஜெயிப்பதில் வல்லமை பெற்ற அணியாக திகழும் பாகிஸ்தான் அணி குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
ஐசிசி தொடர்கள் என்றாலே இந்தியா – பாகிஸ்தான் மோதல் உலக கிரிக்கெட் ரசிகர்களின் Chilli Sauce தான். காரசாரமும், சர்ச்சையும் கலந்த இந்த போட்டி, இந்திய ரசிகர்களுக்கு வெறும் விளையாட்டாக அல்லாமல் தீவிரவாதத்திற்கு எதிரான போராகவே பார்க்கப்படுகிறது. ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் 8 முறை பாகிஸ்தானை எதிர்கொண்டுள்ள இந்தியா 6 முறை வீழ்த்தி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் இலங்கையின் கொழும்புவில் நடப்பாண்டு உலகக் கோப்பை டி20 லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் விளையாடாமல் இருக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் அத்தனையும் கானல் நீராகவே மாறிவிட்டது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, பாகிஸ்தான் உடனான அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்த இந்தியா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிகெட் தொடரில் விளையாடிய போது கைகுலுக்க மறுத்தது பேசுபொருளானது. இரண்டு முறை விளையாடிய போட்டிகளிலும், போட்டிக்கு முன்பும், பின்பும் கை குலுக்காத இந்தியா, எல்லா விதங்களிலும் பாகிஸ்தானை நிராகரித்தது.
இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையே ஏற்பட்ட அரசியல் ரீதியான குழப்பங்களை சுட்டிக்காட்டி உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுடன் விளையாட மறுத்த வங்கதேசம், இலங்கையில் போட்டிகளை நடத்துமாறு ICC இடம் கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கை நிறைவேறாமல் போனதால் தொடரை புறக்கணித்து வெளியேறிய வங்க தேசத்திற்கு பதிலாக வாய்ப்பை பெற்றது ஸ்காட்லாந்து அணி. வங்கதேசத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த பாகிஸ்தான், இந்தியாவுடன் கொழும்புவில் நடைபெறும் போட்டியில் விளையாட மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த ஐசிசி இறுதி எச்சரிக்கையை கொடுத்தது. அதாவது இந்தியாவுடனான இந்த போட்டியை புறக்கணித்தால், 2 ஆண்டுகள் இருதரப்பு தொடர்களில் விளையாட தடை விதிக்கப்படும் என்றும், PSL போன்ற பாகிஸ்தான் நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் சர்வதேச வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்றும் ஐசிசி அதிரடி காட்டியது.
இலங்கையில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணித்தால், தங்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்த பாகிஸ்தான் வேறு வழியின்றி இந்தியாவுடன் விளையாட ஒப்புக் கொண்டது. இப்படியாக பாகிஸ்தான் அரங்கேற்றிய ஒவ்வொரு நாடகமும் அந்த நாட்டுக்கே பின்விளைவை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தது.
அதே போல கொழும்புவில் நடைபெறவுள்ள லீக் போட்டியில் இந்திய வீரர்கள் தங்களுடன் கை குலுக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்த பாகிஸ்தானுக்கு, அது இரு நாடுகளின் அரசியல் சூழலை பொறுத்தது என்றும், இதனை இரு நாடுகள் மட்டுமே சரி செய்து கொள்ள வேண்டும் என்றும் ஐசிசி தெரிவித்துவிட்டது. அதனால், பாகிஸ்தானை விளையாடி தான் ஆக வேண்டும் என அடிபணிய நேரிட்டது. இத்தகைய களேபரங்களுக்கு மத்தியில் நடைபெறுவதால் தான் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி, இறுதிப் போட்டி அளவிற்கான பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
















