நாட்டின் பாதுகாப்புக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் மாறி விட்டார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், பாஜக எதிர்க்கட்சியாக இருந்த போது, சபாநாயகர் மீது காகிதங்களை வீசியதில்லை என்றும் ஆளுங்கட்சி வரிசைக்கு பதாகைகளை எடுத்துச் சென்று முற்றுகையிட்டது இல்லை எனவும் கூறினார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடந்து கொண்ட விதம் வருத்தமளிப்பதாக கூறிய கிரண் ரிஜிஜூ, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பொறுப்பு இல்லாமல் செயல்படுவதாகவும், அவரால் அந்தப் பதவிக்கே இழுக்கு ஏற்பட்டுள்ளது என விமர்சித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் மக்களை துரோகிகள் என்று அழைப்பதும், நாடகத்தனமாக தர்ணா செய்வதும், வெளியிடப்படாத புத்தகத்திலிருந்து வரிகளை வாசிப்பேன் என அடம் பிடிப்பதும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என அவர் கூறினார்.
இப்படிப்பட்ட ஒரு எதிர்க்கட்சித் தலைவரை, இந்தியா இதுவரை பார்த்ததே இல்லை என விமர்சித்த கிரண் ரிஜிஜு, இந்தியாவுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளுடன் ராகுலுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் நாட்டின் பாதுகாப்புக்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக ராகுல்காந்தி மாறி உள்ளதாகவும் கூறினார்.
நக்சல்கள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் போன்றோரை ராகுல் காந்தி சந்திக்கிறார் எனவும் கிரண் ரிஜிஜூ குற்றம்சாட்டினார்.
















