புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே, சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த இளைஞரின் உடலை போலீசார் பாதியிலேயே அணைத்து மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபிநாத் என்பவருக்கும், ரெகுநாதபட்டியை சேர்ந்த பிரியா என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, தாராபுரத்தில் வசித்து வந்தனர். பழனி பாதயாத்திரை செல்வதற்காக இருவரும் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், பிரியா கடந்த இரண்டு நாட்களாக தனது தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் கோபிநாத் தனது நண்பர்களுடன் மது அருந்திய போது அவரது மனைவி தொடர்ந்து போன் செய்தும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த பிரியா, தனது நண்பர்களை வீட்டிற்குச் சென்று பார்க்கச் சொன்னபோது, கோபிநாத் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது. தகவலறிந்த கிராம மக்கள், கோபிநாத்தின் உடலை உடனடியாக தகனம் செய்ய மயானத்திற்கு எடுத்துச் சென்று எரியூட்டத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கருதிய பிரியா, பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, மயானத்திற்கு சென்ற போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் எரிந்து கொண்டிருந்த கோபிநாத்தின் உடலை தண்ணீர் ஊற்றி அணைத்து, உடற்கூறு ஆய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















