ஒரு அச்சறுத்தலாக பார்க்காமல்,‘AI தொழில்நுட்பத்தை இந்தியா புதிய விதியாகவும் உலகின் எதிர்காலமாகவும் பார்க்கிறது என்று பிரதமர் மோடி AI பயன்படுத்தும் விதிமுறை குறித்த ‘மானவ்’ ‘MANAV’ கட்டமைப்பு திட்டத்தை வெளியிட்டுள்ளார். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்கிய AI உச்சிமாநாடு உலகளாவிய AI துறைக்கு ஒரு புதிய திசையை வழங்கியுள்ளது. “அனைவருக்கும் நலன், அனைவருக்கும் மகிழ்ச்சி” என்ற இலக்குடன் AI தொழில்நுட்பத் துறையில் இந்தியாவை முதன்மை நாடாக நிலைநிறுத்தியுள்ளது.
20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள், 45 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், ஐ.நா. பொதுச்செயலாளர் மற்றும் பல சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும், மூத்த அதிகாரிகளும், கூகுள், ஓபன்ஏஐ, மைக்ரோசாஃப்ட் என சுமார் 100-க்கும் மேற்பட்ட உலகளாவிய AI தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களும், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவன அதிகாரிகளும், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் உட்பட 2.5 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
மக்கள், பூமி, முன்னேற்றம் என்ற மூன்று அடிப்படை சூத்திரங்களையும், ஏழு செயல் சக்கரங்களையும் மையமாகக் கொண்டு, வளர்ச்சி சார்ந்த மற்றும் பொறுப்பான AI கட்டமைப்பை இந்தியா முன்னிறுத்தியுள்ளது.
“மக்கள்” என்ற கருப்பொருளின் கீழ், AI-யால் இயங்கும் கருவிகள், மருத்துவம் மற்றும் நோயறிதல் மூலம் சுகாதாரத் துறையை மேம்படுத்துகின்றன. தகவமைப்பு கற்றல் அமைப்புகள் மூலம் கல்வியைத் பரவலாக்குகின்றன. மோசடி கண்டறிதல் தொழில்நுட்பங்கள் மூலம் AI மக்களின் நிதி பாதுகாப்பை உறுதிப் படுத்துகின்றன.
“பூமி”- என்ற கருப்பொருளின் கீழ், துல்லியமான விவசாயம் மற்றும் ட்ரோன் அடிப்படையிலான கண்காணிப்பு ஆகியவற்றுடன் நிலையான விவசாய நடைமுறைகளை AI தொழில்நுட்பம் எளிதாக்குகிறது.
“முன்னேற்றம்” என்ற கருப்பொருளின் கீழ், AI பயன்பாடுகள் நீதிமன்ற தீர்ப்புகளைப் பல மொழிகளில் மொழிபெயர்ப்பதன் மூலம் நிர்வாகத்தை மேம்படுத்துகின்றன. மக்களுக்கான அரசின் சேவைகளை ஒழுங்குபடுத்துகின்றன. இது AI யின் வருகையால் கிராமப்புற உள்ளிட்ட மொத்த இந்தியாவும் பயன் பெறுவதைக் குறிக்கிறது. குறிப்பாக நாட்டில் உள்ள ‘நகர்ப்புற-கிராமப்புற பிளவைக் குறைக்க உதவுகிறது.
உலகளாவிய தெற்கில் நடத்தப்படும் முதல் பெரிய உலகளாவிய AI உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, AI என்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சக்தி என்றும், அது திசையில்லாமல் இருந்தால், சமூகத்துக்கு இடையூறாக மாறும் என்றும், சரியான திசையில் சென்றால் AI ஒரு நல்ல தீர்வாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இயந்திர மையமாக செயல்படும் AI-தொழில்நுட்பத்தை மனிதர்களை மையமாக செயல்பட வைப்பது எப்படி? அதை உணர்திறனுடன் பதிலளிக்கக்கூடியதாக மாற்றுவது எப்படி? என்ற அடிப்படையிலேயே இந்தியா நடத்தும் உலகளாவிய AI உச்சிமாநாடு நடத்தப்படுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
AI தொழில்நுட்ப முன்னேற்றம் சமூக நலனுக்கும் நிலையான வளர்ச்சிக்கும் உதவ வேண்டும் என்ற மானவ் ‘MANAV’ என்ற AI கட்டமைப்பு திட்டத்தை உலகத்துக்கு எடுத்துரைத்துள்ளார்.
நம்பிக்கையையும் வெளிப்படைத் தன்மையையும் மேம்படுத்த ஓப்பன் சோர்ஸ் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், சார்புகள் இல்லாத தரமான தரவுகளை உருவாக்க வேண்டும் என்றும் கூறிய பிரதமர் மோடி, AI-தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தி மக்களை மையப்படுத்திய செயலிகளை உருவாக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
உலக நாடுகள் பொது நன்மைக்காக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உறுதியெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பிரதமர் மோடி, AI தொழில்நுட்பத்தின் நன்மைகள், கடைசி மைல் வரை சென்றடைவதை உறுதி செய்வதற்கான சிறந்த AI சுற்றுச் சூழலை வழங்கும் நிலையில் இந்தியா உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் AI சந்தை 17 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் உலகளாவிய மனிதனை மையப்படுத்திய AI சுற்றுச்சூழல் அமைப்பை வடிவமைப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையே இந்த AI உச்சிமாநாடு எடுத்துக் காட்டுகிறது.
















