சென்னையில் திமுக தொழிற்சங்க நிர்வாகிகளிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, ஒரு தரப்பு திமுகவினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறாததால் இடைக்கால நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் இடையே சில தினங்களுக்கு முன் பல்லவன் இல்லத்தில் உள்ள எல்பிஎப் அலுவலகத்தில் தகராறு ஏற்பட்டு, சங்க கட்டடத்திற்கு பூட்டு போடப்பட்டது.
இதனையடுத்து திமுகவை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், இருதரப்பையும் சமரசம் செய்து தேர்தல் நடத்தும் வரை பழைய நிர்வாகிகளே தற்காலிகமாக தங்களது பொறுப்புகளை தொடரலாம் என தெரிவித்தனர்.
இதன்படி, பழைய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொள்வதற்காக அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, பழைய நிர்வாகிகளும், இடைக்கால நிர்வாகிகளும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரையும், இடைக்கால நிர்வாகிகளான பெரம்பூர் ஆறுமுகம் தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இடைக்கால நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்நிலையில், பெரம்பூர் ஆறுமுகம் உள்ளிட்ட 100 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார், நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
















