ஏ.ஐ. உச்சி மாநாட்டில் சீன ரோபோ நாய் காட்சிப்படுத்தப்பட்ட விவகாரம் பூதாகரமான நிலையில், ரோபோ நாய்கள் ஏன் இந்தியாவுக்கு தேவை, உண்மையில் அவை என்ன செய்கின்றன என்பதை இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்…
செயற்கை நுண்ணறிவில் இந்தியாவின் லட்சியங்களை வெளிப்படுத்தும் நோக்கில், டெல்லியில் முதல்முறையாக நடைபெற்று வரும் ஏ.ஐ. இம்பாக்ட் உச்சி மாநாடு, உலகளவில் கவனத்தை பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் காட்சிப்படுத்திய ரோபோ நாய் சர்ச்சைக்கு மத்தியில், உண்மையில் ரோபா நாய்கள் என்றால் என்ன? அவை இந்தியாவுக்கு ஏன் தேவை என்ற வாதங்கள் எழத் தொடங்கியிருகின்றன.. சர்வதேச அளவில் நான்கு கால்களுடன் வடிவமைக்கப்பட்ட இத்தகைய ரோபோக்கள், தொழில்துறை ஆய்வு, பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைகள், ஆராய்ச்சி பணிகளில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் அத்தகைய தொழில்நுட்பம் தேசிய பாதுகாப்பு என்ற விஷயத்தில் மீண்டும் கவனம் செலுத்தத் தூண்டியுள்ளது.
நாய்களின் இயக்கவியல் மற்றும் பல்துறை திறனைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டவைதான் ரோபோ நாய். மேம்பட்ட சென்சார்கள், கேமராக்கள், கணக்கீடு, ஒலி அமைப்புகளுடன் கூடிய ரோபோ நாய், பல்வேறு சூழ்நிலைகளில், தானியங்கியாகவோ அல்லது பாதி தன்னியக்கமாகவோ செயல்படுகிறது. பொம்மை ரோபோக்கள் அல்லது பொழுதுபோக்கு சாதனங்களை போலன்றி, ரோபோ நாய்கள் கண்காணிப்பு, தளவாட ஆதரவு, உளவு பார்த்தல், அபாயகரமான சூழல்களில் பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற காரணங்களுக்கு வடிவமைக்கப்பட்டவை.
இயந்திர பொறியியல், செயற்கை நுண்ணறிவு ஒன்றிணைக்கப்பட்டதன் மூலம் உயிரியல் விலங்கை போன்று ரோபோ டாக் நிலப்பரப்பில் செல்ல உந்தப்படுகிறது. இதிலுள்ள ஒவ்வொரு காலும் தசைகள் போன்று செயல்படும் சர்வோ மோட்டார்கள் அல்லது ஆக்சுவேட்டர்களால் இயக்கப்படுகிறது. இது ரோபோ டாக்கை படிக்கட்டுகளில் ஏறவும், இறங்கவும் அனுமதிக்கிறது.
ரோபோ டாக்கில் உள்ள LiDAR, கேமராக்கள், அளவீடுகளை கொண்ட சென்சார் தொகுப்பானது, தடைகளை தவிர்க்கவும், நிலப்பரப்பில் 3D வரைபடங்களை உருவாக்கவும் உதவுகிறது. தொலைதூர உணர்திறன் கொண்ட LiDAR தொழில்நுட்பம், தூரங்களை அளவிடவும், துல்லியமான 3D வரைபடங்களை உருவாக்கவும், லேசர் ஒளிக்கற்றைகளை பயன்படுத்துகிறது. hardware மற்றும் software-ன் இறுக்கமான ஒருங்கிணைப்பு, சிக்கலான அல்லது கணிக்க முடியாத சூழல்களில் ரோபோ நாய்களை, சக்கர ரோபோக்களை விட திறமையானதாக மாற்றுகிறது.
ஒரு ரோபோடாக்கை பொறியியல் செய்வதற்கு பல களங்களில் நிபுணத்துவம் தேவைப்படுகிறது. இயந்திர வடிவமைப்பு, மின்னணு அமைப்புகள், ஏ.ஐ. மற்றும் மென்பொருள் போன்றவை அதன் சிறப்பான செயல்பாட்டை ஒருங்கிணைக்கின்றன. இந்தியா ஏற்கனவே உள்நாட்டு ரோபோ நாய்களை பாதுகாப்பு கட்டமைப்பில் ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளது. இந்திய இராணுவம் கடினமான நிலப்பரப்புகளில் செல்லவும், 15 கிலோ வரை எடையுள்ள பொருட்களை சுமந்து செல்லவும், தீவிர வானிலை நிலைகளிலும் செயல்படவும் கூடிய மல்டி-யூட்டிலிட்டி லெக்ட் எக்யூப்மென்ட் என்ற ரோபோ நாய்களை களமிறக்கியிருக்கிறது.
xTerra Robotics மற்றும் General Autonomy போன்ற நிறுவனங்கள் நடைமுறைக்கு ஏற்ற , களத்திற்குத் தயாரான ரோபோ தளங்களை சீராக உருவாக்கி வருகின்றன . இந்த நிறுவனம் அண்மையில் வணிக ரீதியான ஸ்வான்-2 ரோபோக்களை அறிமுகப்படுத்தியது. இது உள்நாட்டு ரோபோட்டிக்ஸ் உற்பத்திக்கான குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.இந்திய நிறுவனங்கள் உள்நாட்டு இயந்திர வடிவமைப்பு, கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் முக்கிய பொறியியல் அமைப்புகளுக்கு அதிகளவில் முன்னுரிமை அளித்து, மேம்பட்ட ரோபோக்களை கண்டுபிடித்திருப்பது நாட்டின் தன்னம்பிக்கையை வலுப்படுத்துகின்றன. இவைகள், தளவாடங்கள், உளவு பார்த்தல், ஆபத்தான முன்னணிப் பணிகளை மேற்கொள்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் மனித பணியாளர்களுக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. இந்தியா “மேக் இன் இந்தியா” தளங்களை தொடர்ந்து மேம்படுத்தும்போது, இதுபோன்ற ரோபோக்கள் நவீன, தொழில்நுட்பத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலக்கல்லாக மாறக்கூடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை…
















