ருசிக்கு பிரபலமான பிரியாணியை விற்பனை செய்யும் புகழ்பெற்ற உணவகங்கள், வரி ஏய்ப்பிலும் பிரபலமாகியுள்ளன.
சந்தேகத்தின் அடிப்படையில் பிரியாணி கடை ஒன்றில் நடத்தப்பட்ட ஒரு சோதனையின் மூலம் பில்லிங் மெஷினில் செய்த தில்லுமுல்லுகளால் நாடு முழுவதும் 70 ஆயிரம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரியாணி என்றாலே நாவில் எச்சில் ஊறிவிடும்… அந்த அளவுக்கு அதன் சுவையும், மணமும் கட்டிப்போட்டுவிடும்.. பிரியாணிகளில் பல வகைகளில் என்றாலும், ஒவ்வொன்றும் இடத்திற்கு ஏற்ப தனிச்சுவையை கொண்டிருக்கின்றன… குறிப்பாக ஐதராபாத் பிரியாணி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. 2017ம் ஆண்டு தெலங்கானா வந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், ஐதராபாத் பிரியாணியின் ருசியில் மயங்கி புகழ்ந்து தள்ளியிருந்தார்… தொழில்நுட்பத்தை விட ஐதராபாத் பிரியாணிதான் உலகப்புகழ் பெற்றது என்பது இவான்கா உதிர்த்த வார்த்தைகள்… இதேபோன்று ஐதராபாத் பிரியாணியின் சுவைக்கும், மணத்திற்கும் மனதை பறிகொடுத்தவர்கள் ஏராளம்…
இப்படி புகழின் உச்சியில் இருக்கும் ஐதராபாத் பிரியாணி நாடு முழுவதும் கிளைகளை திறந்து கோடிக்கணக்கில் கல்லா கட்டி வருகிறது. இப்படிப்பட்ட உணவகம் வரி ஏய்ப்பில் தில்லுமுல்லு செய்து சிக்கியிருப்பதுதான் இன்றைக்காக ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது…. ஐதராபாத் பிரியாணிக்கென நாடு முழுவதும் உள்ள கிளைகளில் பிரியாணியை போன்றே வியாபாரம் சூடு பறக்கும்… ஆனால் அதனை மறைத்து பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள பிரியாணி உணவகங்களில் நடத்தப்பட்ட வழக்கமான சோதனையைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் உணவகங்களில் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பல உணவகங்கள் வரி செலுத்துவதை தவிர்க்க, வியாபாரம் டல் அடிப்பததாக இதுவரை கணக்கு காட்டி வந்துள்ளது… உணவகங்களில் பில்களை உருவாக்கப் பயன்படுத்தும் பெரிய கணினியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் மூலம் இந்த மோசடியை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த பில்லிங்க மென்பொருளை நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் பயன்படுத்துகின்றன.. கணினியில் உள்ள கருவிகள், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, கிட்டத்தட்ட 1.77 லட்சம் உணவகங்களின் பில் பதிவுகளை சரிபார்த்த அதிகாரிகள், 60 டெராபைட் தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதன்படி உணவகங்கள் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்திய பிறகு, பல பில்கள் அப்படியே நீக்கப்பட்டிருந்ததையும், கணினிக்குள் மாற்றப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்ததாக அறிக்கை கூறுகிறது..
இந்தியா முழுவதும், இந்த மென்பொருளைப் பயன்படுத்திய உணவகங்கள் 13 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பில்களை அப்படியே அழித்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும், மறைக்கப்பட்ட விற்பனை 5,100 கோடிக்கு மேல் இருந்ததாக அறிக்கை கூறுகிறது. இருமுறை சரிபார்க்க, அதிகாரிகள் 40 உணவகங்களுக்கு நேரில் சென்று உண்மையான விற்பனையை கணினி பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். அதில் கிட்டத்தட்ட 400 கோடி விற்பனை மறைக்கப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. கர்நாடகாவிலும், தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டிலும் அதிக வரிஏய்ப்பு நடந்திருப்பதையும், உண்மையான விற்பனையை மறைத்து, குறைவாக கணக்கு காட்டியிருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இதுவரை ஆய்வு செய்யப்பட்ட தரவுகளின்படி, அனைத்து உணவக விற்பனையிலும் நான்கில் ஒரு பங்கு மறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
உணவகங்கள் பொதுவாக, பணம், அட்டைகள் மற்றும் UPI ஆகியவற்றை பில்லிங் மென்பொருளில் உள்ளிடுகின்றன, இதனால் ஊழியர்கள் பணத்தைத் திருட முடியாது. ஆனால் உரிமையாளர்கள் தாங்களாகவே இந்த அமைப்பை தவறாகப் பயன்படுத்துவதைக் விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர். பொதுவான தந்திரம், பணத்தைக் கண்காணிப்பது கடினம் என்பதால், ரொக்க பில்களை மட்டும் நீக்குவது. மற்றொரு தந்திரம், குறிப்பிட்ட நாட்களுக்கு அல்லது ஒரு மாதம் முழுவதும் அனைத்து பில்களையும் அழித்துவிட்டு, பின்னர் மிகக் குறைந்த வருமானத்தைக் காட்டி வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது என்று அறிக்கை கூறுகிறது.
இந்தத் தரவுகள் மூலம் உணவகங்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 2.43 லட்சம் கோடி அளவுக்கு விற்பனையை மறைத்திருப்பது பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. இது வெறும் ஆரம்பம்தான் என்று கூறும் அதிகாரிகள், பல பில்லிங் மென்பொருள் அமைப்புகள் உள்ளதாகவும், அவை இதே போன்ற ரகசியங்களை மறைத்து வைத்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். ஐதராபாத் பிரியாணி போன்று பல பிரபல உணவகங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவது அரசு வருவாய் இழப்பை ஏற்படுத்திவிடும் என்பதால் அவற்றுக்கு கடிவாளம் போட அதிகாரிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
















