டெல்லியில் செங்கோட்டை அருகே பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
செங்கோட்டையை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் சாந்தினி சௌக்கின் சில பகுதிகள் உட்பட முக்கிய கோயில்கள், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா கண்காணிப்பில் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
சாந்தினி சௌக்கில் உள்ள ஒரு கோயிலை இலக்காகக் கொண்டு, அந்த பயங்கரவாத அமைப்பு வெடிகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள மசூதியில் கடந்த 6-ம் தேதி நடந்த குண்டுவெடிப்புக்குப் பழிவாங்க லஷ்கர்-இ-தொய்பா முயற்சிப்பதாகவும், இந்தியாவில் ஒரு பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியின் மிகப்பரபரப்பான வணிகப் பகுதியான சாந்தினி சவுக்கில் குறுகிய சந்துகள் அதிகம் என்பதால் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாகச் செங்கோட்டைக்கு அருகிலுள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற பிரச்சின் கௌரி சங்கர் மந்திர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் டெல்லி எல்லைகள் மற்றும் பழைய டெல்லி பகுதிகளில் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
AUDIO:
















