பிறரது துன்பத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமென, திருக்குறள் மற்றும் வள்ளலாரின் வரிகளை மேற்கோள் காட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.
இன்ஃபைனைட் சேவா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஏற்பாட்டில், மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி மக்கள் மாளிகையில் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய ஆளுநர், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், பர்மா முதல் தாய்லாந்து வரையிலும், மக்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார். திருக்குறள் மற்றும் வள்ளலாரின் கூற்றுக்களை மேற்கோள் காட்டி, பிறரின் துன்பத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சேவை என்பது இந்தியாவின் இன்னொரு முகம் என்று கூறிய ஆளுநர், பிறருக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் என்று தெரிவித்தார். அதன் அடிப்படையில்தான் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருவதாகவும், மக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
















