சென்னையில் தான் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரின் நேர்மையைப் பாராட்டி, அவருக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டதோடு, ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று இன்ப அதிர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பத்மா, சுமார் 45 லட்ச ரூபாய் மதிப்பிலான 45 சவரன் தங்க நகைகளைக் கண்டெடுத்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அவரின் இந்தச் செயலைத் தமிழகமே பாராட்டியதுடன், ரஜினிகாந்த் நேரில் அழைத்து தங்கச்சங்கிலி அணிவித்து கௌரவித்தார். பத்மாவின் இந்த நேர்மையை மதிக்கும் விதமாக, பாலமுருகன் என்டர்பிரைசஸ் நிறுவனர் வெங்கடேசன், செங்கல்பட்டு மாவட்டம் நெல்லி கிராமத்தில் ஒரு வீட்டுமனையை பத்மாவிற்கு அன்பளிப்பாக வழங்கினார்.
மேலும், பத்மாவை ஹெலிகாப்டரில் பறக்க வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
















