சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்டதை விட குறைவான தொகுதிகளை வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளது. கடந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சிக்கு ஒரு தொகுதி மட்டும் வழங்க திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மதிமுக, மனிதநேய மக்கள் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து திமுகு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் மதிமுக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. தற்போது 12 தொகுதிகள் வரை கேட்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாகவும், ஒரு மாநிலங்களவை இடத்தை கேட்டுபெறவும் மதிமுக திட்டமிட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சிக்கு கடந்த முறை 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 5 தொகுதிகளை கேட்டுப்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டதை விட குறைவான தொகுதிகளையே திமுக வழங்க முன்வந்துள்ளதாகவும் 173 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
















