உலகின் மிக ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான எல் மென்சோ என்பவரை மெக்சிகோ ராணுவத்தினர் சுட்டுக்கொன்றதால் அவரது கூட்டாளிகள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு மாகாணமான ஜாலிஸ்கோவில் ராணுவ நடவடிக்கையை மெக்சிகோ அரசு மேற்கொண்டது. இதில், போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மென்சோ பலத்த காயமடைந்தார்.
உடனடியாக, மெக்சிகோவுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட போது அவன் உயிரிழந்தான். இந்தத் தகவலை அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, மெக்சிகோவில் வன்முறை வெடித்தது. ஜாலிஸ்கோ உள்பட பல்வேறு மாநிலங்களில், எல் மென்சோவின் ஆதராவாளர்கள் கார்களை தீயிட்டு கொளுத்தியும், சாலைகளில் துப்பாக்கிகளுடன் சென்று பொதுமக்களை மிரட்டியும் வருகின்றனர்.
மேலும் கட்டடங்கள், வாகனங்கள், வணிக வளாகங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது.
மெக்சிகோவில் நிலைமையைக் கட்டுப்படுத்த மாநில அரசு நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அதிபர் கிளாடியா ஷீன்பாம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மெக்சிகோவில் வன்முறை நிலவுவதால், ஜாலிஸ்கோ, தமுலிபாஸ், மைக்கோகன் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதேபோல, அமெரிக்கா, கனடாவும் தங்களின் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
















