இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பையேற்று இஸ்ரேலுக்குப் பிரதமர் மோடி செல்வதற்கு முன்பாகவே இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறை சார்ந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இஸ்ரேலுக்குப் பிரதமர் மோடி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. ஏற்கெனவே 2017 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின் போது தேசப்பாதுகாப்புக்கான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இஸ்ரேலின் மொத்த பாதுகாப்பு ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 34 சதவீதமாகும். 2020 முதல் 2024 வரை இரு இரு நாடுகளுக்குமான ஆயுத ஒப்பந்தங்கள் 20.5 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளன.
மேலும், 8.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய துல்லியமான வெடிமருந்துகள், SPICE bomb அமைப்புகள்,ட்ரோன்கள் மற்றும் தேஜஸ் Mk-1A போர் விமானங்களுக்கான AESA ரேடார்களுக்கான தொகுப்பு ஆகியவை இந்தியாவுக்கு இஸ்ரேல் வழங்கியுள்ளது.
ஏற்கெனவே இஸ்ரேல் மற்றும் இந்தியாவின் கூட்டுப் பணிக்குழு, இஸ்ரேல் தலைநகரில் தங்கள் வருடாந்திர கூட்டத்தை நடத்தியது. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் (IMOD) இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் அமீர் பரம் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் இருநாடுகளும் பாதுகாப்பு, தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டன. மேலும், மேம்பட்ட உயர் தொழில்நுட்ப லேசர் பாதுகாப்பு மற்றும் ஸ்டாண்ட்-ஆஃப் அமைப்புகள் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.
நாட்டின் 79வது சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி, மிஷன் சுதர்சன் சக்ரா என்ற பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்தார். இது 2035ம் ஆண்டுக்குள் இஸ்ரேலின் iron dome போல் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகளுடன் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் திட்டமாகும்.
எதிரிகளின் தாக்குதல்களை நடுநிலையாக்குவதும், விரைவான எதிர் தாக்குதல்களை செயல்படுத்துவதும் , விரைவான, துல்லியமான பாதுகாப்பை உறுதி செய்வதும் மிஷன் சுதர்சன் சக்ராவின் நோக்கமாகும்.
இதற்காக இஸ்ரேலுடன் இணைந்து ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
நீண்ட தூர (ARROW) அம்பு, நடுத்தர தூர David’s Sling மற்றும் குறுகிய தூர Iron Dome போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் இஸ்ரேல் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 98 சதவீத ஏவுகணைகளை இஸ்ரேலின் வனப்பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளன.
எனவே இஸ்ரேலின் தொழில்நுட்பங்களுடன் இணைந்து புதிய ஏவுகணை எதிர்ப்பு வான் அமைப்புகளை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா காட்டிய அதிரடியைப் பார்த்து உலகமே வியந்தது.
பாகிஸ்தான் பயன்படுத்தும் சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவிய இந்தியாவின் ராம்பேஜ் ஏவுகணைகள், Palm 400, (Harpy) ஹார்பி மற்றும் (Harop kamikaze) ஹரோப் காமிகேஸ் ட்ரோன்கள் பாகிஸ்தானில் உள்ளேயுள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கியழித்தன.
கூடுதலாக Spice 1000 glide bombs, Rampage air-to-surface ஏவுகணைகள், Air Lora ballistic ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூர Ice Breaker வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியா உருவாக்க உள்ளது.
மின்னணு போர் மற்றும் வெடிமருந்து ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பரந்த தொழில்நுட்ப பரிமாற்றங்களுக்கான இந்தியாவுடனான இஸ்ரேலின் ஒப்புதல் பரஸ்பர பயங்கரவாத எதிர்ப்பு கொள்கைகளால் தீர்மானிக்கப் படுகின்றன என்று கூறப்படுகிறது.
பிரதமரின் இஸ்ரேல் பயணத்தின் போது எல்லைப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்தை ஒழிக்க அதிநவீன தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வது, வளர்ந்து வரும் AI தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவது, மற்றும் இஸ்ரேலின் நவீன நீர் மேலாண்மைத் தொழில்நுட்பங்களை இந்தியாவில் பயன்படுத்துவது என முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















