பெண்களை பாதுகாக்கும் சட்டங்களை ரத்து செய்துள்ள தாலிபன் அரசு ஆப்கானில் புதிய தண்டனை சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதில் ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிக்க சட்டப்பூர்வமாக அனுமதித்துள்ளது. என்ன ஒன்று எலும்புகள் உடையாமலும் கடுமையான காயங்கள் ஏற்படாமலும் அடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது.
இஸ்லாமிய மதச்சட்டத்தின் கீழ் ஆட்சி நடத்தும் தலிபான்கள் பெண்களின் உரிமைகளைப் பறித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளன. ஆண்களுக்கு அடிமையாக இருக்க மட்டுமே அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் தலிபான் அமைப்பின் தலைவரான ஹிபதுல்லா அகுந்த்சாடா கையெழுத்திட்ட புதிய 90 பக்க குற்றவியல் சட்டம் ஆப்கானில் அமல்படுத்தப் பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்டத்தின் படி, ஆப்கானிஸ்தானின் மக்கள் உயர்வகுப்பு, நடுத்தர வகுப்பு மற்றும் கீழ் வகுப்பு எனப் பிரிக்கப் பட்டுள்ளது. இஸ்லாமிய மதத் தலைவர்கள், மத குருமார்கள் அனைவரும் சட்டத்துக்கு மேற்பட்டவர்கள் என்றும், அவர்களை நாட்டின் குற்றவியல் சட்டம் கட்டுப்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் வகுப்பினர்க்கு சம்மன் மட்டுமே அனுப்பப்படும் என்றும், நடுத்தர வகுப்பினருக்கு சிறையும், கீழ் வகுப்பினருக்கு சிறை தண்டனையும் உடல் ரீதியான தண்டனையும் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இது பதினேழாம் நூற்றாண்டில் ஔரங்கசீப்பின் ஆட்சியின் மதத் தீர்ப்புகளின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட சமூக வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட தண்டனை முறை என்று கூறப் படுகிறது.
புதிய சட்டத்தில் ஆப்கான் கணவர்கள் தங்கள் மனைவிகளையும் குழந்தைகளையும் வலுக்கட்டாயமாக அடிக்கவும் தண்டிக்கவும் அனுமதி அளித்துள்ளது. அடிக்கும் போது எலும்பு முறியாத வரை வெளிப்படையான காயம் ஏற்படாத வரை கணவரின் செயல் குற்றமாக கருதப்படாது என்றும் காயம் ஏற்பட்டாலோ, எலும்பு முறிந்தாலோ கணவருக்கு 15 நாட்கள் வரை மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கள் உடல் முழுமையாக மூடப்பட்டிருப்பதை உறுதிசெய்து கொண்டு அவர்களின் கணவர் அல்லது ஆண் பாதுகாவலருடன் மட்டுமே புகாரளிக்க வரவேண்டும் என்றும், பெண்கள் தங்கள் காயங்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு பெண் தனது கணவரின் அனுமதியின்றி தனது பிறந்த வீட்டில் தங்கினாலோ ,கணவர் அழைத்தும் வராமல் இருந்தாலோ,அந்த பெண்ணுக்கு மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனை வழங்கலாம் என்று சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கணவனுக்குத் அவளைத் திருப்பித் தரவில்லை என்றால், குடும்பத்தினரும் அதே தண்டனைக்குரிய குற்றவாளிகளாவார்கள் என்றும் கூறப் பட்டுள்ளது.
இஸ்லாத்தை விட்டு வெளியேறும் ஒரு பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறியுள்ள புதிய சட்டம், கூடுதலாக, அந்தப்பெண் இஸ்லாத்துக்குத் மதத்திற்குத் திரும்பும் வரை ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் 10 சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபானின் சட்டம் பெண்களுக்கு எதிரான உடல், உளவியல் அல்லது பாலியல் வன்முறையை என்பதை தூண்டும் வகையில் உள்ளதாக சர்வதேச மனித உரிமை நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
















