கிரீஸ் நாட்டின் கலாசிடியில் வசந்த காலத்தின் தொடக்கத்தை வரவேற்கும் மாவு வீச்சு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கிரீஸ் நாட்டின் அழகிய கடற்கரை நகரமான கலாசிடியில், ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற மாவுப் வீச்சு திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.
19-ஆம் நூற்றாண்டில் ஓட்டோமான் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் கிரேக்கம் இருந்தபோது, அங்கிருந்த மக்கள் தங்களின் சுதந்திர உணர்வை வெளிப்படுத்தவும், அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் இத்தகைய கொண்டாட்டங்களைத் தொடங்கினர்.
இன்று இது ஒரு மாபெரும் சுற்றுலா ஈர்ப்பாக மாறியுள்ளது. ஆரம்ப காலத்தில் பாரம்பரியமாக, மக்கள் தங்கள் முகங்களில் நிலக்கரிச் சாம்பலைப் பூசிக்கொண்டு ‘கறுப்பு முகங்களுடன்’ கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
தற்போது டன் கணக்கில் பல்வேறு வண்ணங்களில் மாவுகளை ஒருவர் மீது ஒருவர் பூசி மகிழ்கின்றனர். மாவுப் பொடிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, வீடுகள் மற்றும் கடைகளின் முன்பகுதிகள் பிளாஸ்டிக் தாள்களால் முழுமையாக மூடப்பட்டிருந்தன.
















