சீனாவின் டீப்சீக் உள்ளிட்ட 3 முன்னணி நிறுவனங்கள் மீது பிரபல AI நிறுவனமான ‘ஆந்த்ரோபிக்’ தகவல் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அமெரிக்காவின் பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக் தனது ‘கிளாட்’ செயற்கை நுண்ணறிவு மாடலின் திறன்களை சீன நிறுவனங்கள் சட்டவிரோதமாகப் பிரதி எடுத்துள்ளதாகப் புகார் தெரிவித்துள்ளது. இதற்காக அந்த நிறுவனங்கள் பிரம்மாண்டமான அளவில் போலி கணக்குகளைப் பயன்படுத்தியுள்ளதாக ஆந்த்ரோபிக் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஆந்த்ரோபிக் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, MiniMax நிறுவனம் சுமார் 13 மில்லியன் உரையாடல்களை நிகழ்த்தி அதிகப்படியான தரவுகளைத் திருடியதாகக் கூறப்படுகிறது. Moonshot AI நிறுவனம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உரையாடல்களை மேற்கொண்டுள்ளது.
DeepSeek நிறுவனம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை தகவல்களைச் சேகரித்துள்ளதாகவும் ஆந்த்ரோபிக் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த விவகாரம் வெறும் வணிக ரீதியிலான மோதலாக மட்டும் பார்க்கப்படாமல், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவும் கருதப்படுகிறது.
முறையற்ற வகையில் உருவாக்கப்பட்ட இந்த AI மாடல்கள், பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இன்றி தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக ஆந்த்ரோபிக் எச்சரித்துள்ளது.
















