சென்னையில், சட்டவிரோதமாக முடிமாற்று சிகிச்சை வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரது ஜாமின் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னையில் சட்டவிரோதமாக முடி மாற்று சிகிச்சை செய்து வருவதாக அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அண்ணாநகரில் செயல்பட்டு வந்த மிஸ்டர் ஹேர் கிளினிக்கில் சோதனை நடத்தினர்.
விசாரணையில், அங்கு உரிய மருத்துவம் படிக்காமல், 12ம் வகுப்பு படித்த சுமார் 14 பேர் வேலை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும், தலையில் முடி நடுவதற்கு முன்பு, மயக்க மருந்து செலுத்தும் நபரும், வீடியோ கால் மூலம் வேறொரு நபரிடம் ஆலோசனை பெற்று மயக்க மருந்து கொடுத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சட்டவிரோதமாக கிளினிக் நடத்தி வந்த பெங்களூருவை சேர்ந்த ராஜாராம், ஓமியோபதி மருத்துவர் விஜயலட்சுமி உள்ளிட்ட 8 பேர் மீது இந்திய மருத்துவ கவுன்சில் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இவர்களில் விஜயலட்சுமி, ராஜாராம் உள்ளிட்ட 4 பேர் தலைமறைவாகியுள்ளனர்.
இதனிடையே, இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமின் வழங்கக் கோரி பவுஷியா, சமீருல்லா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
















