திருச்சி காஜாமலையில் உள்ள கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திமுக சார்பில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காஜாமலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.
காஜாமலை பகுதியில் சட்டக் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் ஈவெரா பெரியார் கல்லூரி ஆகியவை இயங்கி வரும் நிலையில், இந்த ஜல்லிக்கட்டு காரணமாக கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் உயிர் பயத்துடன் சென்று வருவதாக அச்சம் தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுகள், கல்லூரிகள் அமைந்துள்ள சாலை முழுவதும் ஆங்காங்கே சுற்றித் திரிந்து வருகின்றன.
மேலும் சில மாடுகள் அதன் உரிமையாளர்களின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தெறித்து ஓடுவதால் பலரும் காயம் அடைந்தனர்.
முன்னறிவிப்பின்றி சாலைகள் முழுவதும் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து மாற்றப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர்.
திருச்சியில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய சாலை முழுவதும் ஜல்லிக்கட்டு மாடுகள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும், கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்தது ஏன்? என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
















