நான்காண்டு காலமாக ரஷ்ய போரால் முழுவதும் சோர்வடைந்து விட்டதாக கூறியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதற்காக ஒரு போதும் ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கையை எடுத்தது. நான்காண்டுகளுக்குப் பிறகும் ரஷ்யா உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு 1,418 நாட்களைத் தாண்டியது. இது இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியைத் தோற்கடிக்க அன்றைய சோவியத் யூனியன் எடுத்துக் கொண்ட அதே கால அளவு ஆகும்.
சொல்லப்போனால், நான்காண்டுகள் ஆகியும் இன்னமும் உக்ரைனின் கிழக்குப் பகுதியை முழுமையாக கைப்பற்ற முடியாமல் ரஷ்யா திணறுகிறதா? என்ற கேள்வியையும் சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மிகப் பெரிய நீண்ட போராக கருதப்படும் ரஷ்யா- உக்ரைன் போரில் இரு தரப்பிலும் கிட்டத்தட்ட 2 மில்லியன் வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது. பல லட்சக் கணக்கான மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு புலம் பெயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரே நாளில் ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினை அலாஸ்காவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி எடுத்தார்.
உடனடி போர் நிறுத்தத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரும்பினாலும், அதை நிராகரித்த ரஷ்ய அதிபர் புதின் ஒரு விரிவான அமைதி திட்டத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்த அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தான் போரின் நான்காவது ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ,போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுக்கு அமெரிக்கா போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
நாடும் மக்களும், ராணுவமும் மிகவும் சோர்வடைந்து விட்டதாக ஒப்புக் கொண்டுள்ள ஜெலன்ஸ்கி, ஆனாலும் ரஷ்யாவுடன் சரணடைய விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபரே ஒரு போர் என்றும் புதினின் பிடியில் ரஷ்யாவே சிறையில் இருப்பதாக தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி ஒரு தனி நபருக்கு எதிராகப் போராடும் ஒரு ஜனநாயக நாடான உக்ரைனுடன் தான் அமெரிக்கா நிற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ரஷ்யாவை விட வலிமையான அமெரிக்கா, ரஷ்யாவுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா முன்வைத்த அமைதி திட்டத்தில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் தெளிவாக இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள ஜெலன்ஸ்கி, வருங்காலத்தில் மீண்டும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால், உக்ரைனின் நட்பு நாடுகள் என்ன முடிவெடுப்பார்கள் ? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
வரும் ஜூன் மாதத்துக்குள் போரை நிறுத்தவேண்டும் என்று கெடு விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போரின் முடிவைக் குறிக்கும் சிறப்பு விழாவின் போது, ரஷ்யாவுடனானஅமைதி ஒப்பந்தத்திலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான பாதுகாப்பு உத்தரவாத ஒப்பந்தத்திலும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஒரே நேரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன் ரஷ்யா- உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட ட்ரம்ப் ஆசைப்பட்டாலும் அது நடக்குமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
















