இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆரத்தழுவி வரவேற்றார்.
2 நாட்கள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையம் சென்றடைந்தார்.
அப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகு ஆகியோர் நேரில் சென்று ஆரத்தழுவி பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர், விமான நிலையத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டு, ராணுவ மரியாதையுடன் பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பிறகு, விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன், பெஞ்சமின் நெதன்யாகு ஒரு தனிப்பட்ட சந்திப்பை நடத்தினர்.
இதனையடுத்து, டெல் அவிவ் நகரில் உள்ள தங்கும் விடுதியை வந்தடைந்தபோது, இந்திய வம்சாவளியினர் மற்றும் இஸ்ரேல் கலைஞர்கள் சார்பில் கலாச்சார நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக, விமான நிலையத்தில் வரவேற்கும்போது, சாரா நெதன்யாகு அணிந்திருந்த ஆரஞ்சு நிற ஆடையையும், பிரதமர் மோடி அணிந்திருந்த கோட்டில் உள்ள நிறத்தையும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சுட்டிக்காட்டினார். அதற்கு, சிரித்துக்கொண்டே பிரதமர் மோடி, அது “காவி நிறம்” என்று பதிலளித்தார்.
இதனிடையே, கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியன்று, இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மக்களின் வலியை பகிர்ந்து கொள்வதாகவும், ஒட்டுமொத்த இந்திய மக்களும் கடினமான சூழலில் துணை நிற்போம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனிடையே, பிரதமர் மோடி ஆரத்தழுவி வெளிப்படுத்திய அன்பால் மனம் நெகிழ்ந்து போனதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். MODI HUG எப்போதுமே ஸ்பெஷலானது எனவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்தியா – இஸ்ரேல் நாடுகளின் உறவை வலுப்படுத்தியதற்காக “SPEAKER OF THE KNESSET MEDAL” விருது வழங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
















