கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயம் அரசு மருத்துவமனை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பெண் உயிரிழந்த விவகாரம், கோழிக்கோட்டை சேர்ந்த பெண்ணின் வயிற்றில் கத்திரிகோல் வைத்து மருத்துவர்கள் தைத்த சம்பவம் ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது.
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பதவி விலக வேண்டுமென்றும் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கண்ணூர் ரயில் நிலையத்திற்கு வந்த அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி காங்கிரஸ் மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வீணா ஜார்ஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
















