பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2 நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு உரையாற்ற சென்றார். அப்போது, இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று நீண்ட நேரம் கைதட்டி “மோடி, மோடி” என்று உற்சாகமாக முழக்கமிட்டு வரவேற்பு அளித்தனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது மனைவி சாரா நெதன்யாகு ஆகியோர், பிரதமர் மோடியை வரவேற்று முன்வரிசையில் அமரவைத்தனர். பின்னர், வரவேற்பு உரையாற்றிய சபாநாயகர் அமீர் ஓஹானா, பிரதமர் மோடி இந்தியாவின் மிகச்சிறந்த மனிதர் மட்டுமல்ல, இஸ்ரேலின் உண்மையான மற்றும் மாறாத நண்பர் என்று புகழாரம் சூட்டினார்.
பின்னர் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் மோடியை தனது நெருங்கிய சகோதரர் என்றும் இருவரிடையே இருக்கும் தனிப்பட்ட நட்புறவு இரு நாடுகளையும் இணைப்பதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவும், இஸ்ரேலும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பில் இந்தியாவுக்கு இஸ்ரேல் எப்போதும் துணை நிற்கும் எனவும் நெதன்யாகு கூறினார்.
இதனையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் வசிக்கும் யூதர்கள் தங்களின் பங்களிப்பை உரிய முறையில் அளித்து வருவதாக கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து செயல்படும் எனவும், பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவும் இஸ்ரேலை போலவே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரச்னைகளுக்கு எப்போதும் இந்தியா அமைதி முறையில் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண விரும்புவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
















