இந்தோனேசியாவின் பாலி தீவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
பாலி தீவில் உள்ள படுங் பகுதியில் பெய்த மிக கடுமையான மழையினால் முழங்கால் அளவிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் குடியிருப்புகள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. சில குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் 2 மீட்டர் உயரம் வரை எட்டியுள்ளது. லெகியான், தேவி ஸ்ரீ சாலை, நகுலா மற்றும் கிருஷ்ணா போன்ற பகுதிகளில் சாலைகளிலும் வீடுகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்தோனேசியாவின் தேசிய தேடல் மற்றும் மீட்பு முகமை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணிகளை விரைவாக மேற்கொண்டுள்ளனர். படுங் மாவட்ட அரசு, மழைநீரை விரைவாக வெளியேற்றும் வகையில் வடிகால் வசதிகளைச் சீரமைக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
















