கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், மார்ச் 7-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கோவையில் கடந்த நவம்பர் மாதம், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
விமான நிலையத்தின் பின்புறம் காரில் இருந்த ஆண் நண்பரை தாக்கி விட்டு மாணவியை கடத்திச் சென்ற கும்பல், அவரை கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சதீஷ், கார்த்தி, தவசி ஆகிய 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவி, அவரது நண்பர் உட்பட 78 முக்கிய சாட்சிகள் என மொத்தம் 112 சாட்சிகளிடம், மாவட்ட மகளிர் நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்தியது. தடயவியல் ஆதாரங்கள், செல்போன் சிக்னல்கள் உள்ளிட்ட அறிவியல் சான்றுகளும் போலீசாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்நிலையில், அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் மார்ச் 7-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
















