நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் புதிதாக திறக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில், மழைநீர் வடிகால் வசதி முறையாக செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
சேரன்மகாதேவி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே மேம்பாலம் சுமார் 239 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
அந்த விழாவில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில், மேம்பாலத்தில் இருந்து ரவுண்டானா வரை முறையான மழைநீர் வடிகால் ஓடை மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல நடைமேடை அமைக்கப்பட்டுள்ளதாகக் காண்பிக்கப்பட்டது.
இந்நிலையில், பாலத்திலிருந்து வெறும் 50 மீட்டர் தூரம் வரை மட்டுமே இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பகுதிகளில் பழைய ஓடைகள் மூடப்பட்டும், புதிய ஓடைகள் அமைக்கப்படாமலும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மழைநீர் வடிகால் மற்றும் நடைமேடை அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
















