இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக, துபாயில் சிக்கித்தவித்த 217 பேர் எமிரேட்ஸ் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் காரணமாக, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
இதனால் கடந்த சனிக்கிழமையில் இருந்து, துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த 200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம், மூன்று நாட்களுக்குப்பின், இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது.
இந்தப் பயணிகள் அனைவரும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து புறப்பட்டு துபாய் வழியாக சென்னைக்கு டிரான்சிட் பயணம் மேற்கொண்ட நிலையில் அங்கு சிக்கித்தவித்தவர்கள் ஆவர்.
இதனிடையே, கத்தாரின் தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கத்தார் அதிகாரிகள் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் மூலம் வெளியிடும் செய்திகள் மற்றும் வழிகாட்டுதல்களை இந்திய சமூகம் உன்னிப்பாக பிந்தொடர வேண்டும், சரிபார்க்கப்பட்ட மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்கவேண்டும் என்று கத்தார் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. கத்தார் வான்வெளி மூடப்பட்டிருப்பதை கத்தார் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
















