அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் ஈரானின் முக்கிய அணு மற்றும் ராணுவ தளங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சீன தயாரிப்பான HQ-9B என்ற ஈரான் வான் பாதுகாப்பு அமைப்பின் செயல்திறன் மீண்டும் சர்ச்சையின் மையமாகியுள்ளது.
அணு திட்டங்கள் மற்றும் பிராந்திய ஆதிக்கப் போட்டியை மையமாகக் கொண்டு, மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, ஈரான் மீது ஒருங்கிணைந்த வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்கள் அமைந்துள்ள மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதல்கள் அந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு சமநிலையைப் பற்றிய உலகளாவிய கவலைகளை அதிகரித்துள்ளன. இதனிடையே, ஈரானின் வான் பாதுகாப்பு திறன், அதற்கு ஆதரவாக உள்ள வெளிநாட்டு ஆயுத தொழில்நுட்பங்கள், மற்றும் மேற்கு நாடுகளின் துல்லியமான தாக்குதல் திறன்கள் ஆகியவை மீண்டும் சர்வதேச விவாதத்தின் மையமாக மாறியுள்ளன.
குறிப்பாக ஈரானின் 20 மாகாணங்களை குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்களில், உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி வசித்து வந்த வளாகம், அணு நிலையங்கள் உட்பட பல முக்கிய தளங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கமேனி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதனிடையே, இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள சமீபத்தில் சீனாவிடம் இருந்து பெற்றதாக கூறப்படும், HQ-9B என்ற வான் பாதுகாப்பு அமைப்பை ஈரான் தனது அணு நிலையங்களை சுற்றி நிலை நிறுத்தியிருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. இருப்பினும், முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க அந்த அமைப்பால் இயலவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், HQ-9B வான் பாதுகாப்பு அமைப்பை தாங்கள் ஈரானுக்கு வழங்கவில்லை என சீனா அதிகாரபூர்வமாக மறுத்துள்ளது.
ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு பல அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரத்தில் HQ-9B, S-300 PMU-2 மற்றும் Bavar-373 போன்றவையும், நடுத்தர தூரத்தில் Khordad-15 மற்றும் Raad போன்றவையும், குறுகிய தூரத்தில் Tor-M2, Pantsir-S1 போன்றவையும் செயல்படுகின்றன. இருந்தபோதிலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஒருங்கிணைந்த தாக்குதலில், பல ஏவுகணைகள் இந்த பாதுகாப்பு வளையத்தை கடந்து தாக்கியதாக கூறப்படுகிறது. Natanz மற்றும் Fordow போன்ற அணு நிலையங்கள், புரட்சிகர காவல் படை ஏவுகணை தளங்கள் மற்றும் டெஹ்ரான் அருகிலுள்ள விமான தளங்கள் ஆகியவை இந்த தாக்குதலின் முக்கிய இலக்குகளாக இருந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக பாகிஸ்தான் தளங்கள் மீது இந்தியா நடத்திய “ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின்போதும், இந்த HQ-9B வான் பாதுகாப்பு அமைப்பு பயனளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
சீனாவின் Aerospace Science and Industry Corporation உருவாக்கிய HQ-9B, ரஷ்யாவின் S-300 மற்றும் அமெரிக்காவின் Patriot PAC-2 அமைப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நீண்ட தூர ஏவுகணை எதிர்ப்பு அமைப்பாகும். இது சுமார் 260 கிலோ மீட்டர் தூரமும், 50 கிலோ மீட்டர் உயரமும் சென்று இலக்குகளை குறிவைத்து அழிக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன் ஒரே நேரத்தில் 100 இலக்குகளை கண்காணித்து, 6 முதல் 8 இலக்குகள் வரை தாக்கி அழிக்கும் திறன் இதற்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஈரான் மீதான இந்த தாக்குதல்கள், ஈரானின் வான் பாதுகாப்பு திறன், சீன ஆயுத தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை மற்றும் மேற்கு நாடுகளின் மேம்பட்ட தாக்குதல் தொழில்நுட்பங்கள் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.
















