ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை வெளிநாட்டினர் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
வடஇந்தியாவில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற காசா கோதி பகுதியில் சுற்றுலாத் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் கலந்துகொண்டு ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
காசா கோதி ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளைத் தூவி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். ராஜஸ்தானின் பாரம்பரிய இசை மற்றும் மேள தாளங்களுக்கு ஏற்ப வெளிநாட்டினர் நடனமாடியது பார்ப்பவர்களைக் கவர்ந்தது.
பண்டிகையின் ஒரு பகுதியாக, சுற்றுலாப் பயணிகளுக்கு ராஜஸ்தானின் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டன. மேலும், உள்ளூர் நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் விழாவிற்கு கூடுதல் மெருகூட்டின.
இந்திய மக்களின் விருந்தோம்பலை உணரவும் இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்ததாகப் பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
















