நாங்குநேரியை போன்று மானாமதுரை அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் தெருவில் இருந்தவர்களை விரட்டி சென்று தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் மேலத்தெருவில் பட்டியலினத்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இடைக்காட்டூரைச் சேர்ந்த ராஜூ என்பவர் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக மதுபான கூடத்திற்கு சென்ற இளைஞர்கள் ராஜூவிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை அரிவாளால் தாக்கியுள்ளனர்.
ராஜூ அங்கிருந்து தப்பி வீட்டிற்கு வந்த நிலையில், விடாமல் 3 இருசக்கர வாகனங்களில் துரத்தி வந்த கும்பல் தெருவில் புகுந்து கண்ணில் படும் நபர்களை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த தினேஷ், ராஜேந்திரன், சுப்ரமணியன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக புகாரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சம்பவத்தை வெளியே கூற வேண்டாம் என மிரட்டி சென்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















