கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத குவாரியை அம்பலப்படுத்த முயன்ற செய்தியாளரை தாக்கிய வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலையில், திருவரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டிக்கு சொந்தமாக சட்டவிரோத குவாரி இயங்குவது தொடர்பாக, செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டியன் உள்ளிட்டோரை, பழனியாண்டி உள்ளிட்டோர் கடுமையாக தாக்கியதுடன்,
கேமரா உள்ளிட்ட உபகரணங்களை சேதப்படுத்தியதாக, குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி செய்தியாளர் கதிரவன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உரிய முறையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவாக பதில் மனு தாக்கல் செய்வதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பதில் மனு தக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
















