சென்னை உயர்நீதிமன்றத்தின் 55 வது புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவியேற்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா பணி ஓய்வு பெறுவதை அடுத்து, உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைப்படி, சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்து, கடந்த 1992ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை வருமான வரித்துறை, வங்கி மற்றும் மத்திய அரசு துறைகளில் வழக்கறிஞராக பணியாற்றிய சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, 2016-ம் ஆண்டு மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2018-ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவர், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்கிறார்.
















