அமெரிக்காவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தங்கள் நாட்டு போர் கப்பலை இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்குமாறு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இலங்கையின் காலி துறைமுகம் அருகே இந்தியப் பெருங்கடலில் பயணித்த ஈரானின் ஐரிஸ் டீனா என்ற போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்தது. இதில் 87 பேர் உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து ஈரானின் இரண்டாவது போர்க்கப்பல் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இலங்கை கடற்பகுதி அருகே வந்து கொண்டிருக்கிறது. இந்தக் கப்பலும் அமெரிக்காவால் குறி வைக்கப்படலாம் என்ற அச்சத்தில் போர்க்கப்பலில் பாதுகாப்பிற்காக அதனை இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்குமாறு இலங்கையிடம் ஈரான் கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில், காணாமல் போன ஈரான் மாலுமிகளை இலங்கை கடற்படையுடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபடுவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் மீட்புப் பணியில் ஈடுபட்டதாகவும், கொச்சியில் இருந்து சென்ற ஐ.என்.எஸ் இக்சாக் கப்பலும் தேடுதல் பணியில் ஈடுபட்டதாகவும், இந்திய கடற்படை கூறியுள்ளது. மேலும், மீட்பு பணிக்காக கடற்படைக்கு சொந்தமான விமானத்தையும் தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















